
மருத்துவரான இவர் சபர்மிதி சிறையில் இருந்தபோது சிறையில் உள்ள கிளினிக்கில் இவர் வேலைக்கு அமர்த்தப்பட்டார்.பின்னர் அங்கிருந்து சிறை லைப்ரரி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த கால கட்டத்தில் அம்பேத்கர் திறந்த வெளிபல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி பட்டப்படிப்பில் சேர்ந்தார். சிறையில் இருந்த காலகட்டத்தில் எம்எஸ்சி, பிகாம், எம்காம் மற்றும் பட்டமேற்படிப்பு டிப்ளமோ உட்பட 31 பட்டங்களை வாங்கிக் குவித்தார். இந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இவரது சாதனையை பாராட்டி அம்பேத்கர் பல்கலைக்கழகம் இவருக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கி கவுரவித்தது. தற்போது இவர் மாநில சிறைகளில் உள்ள 26 தொலைதூர கல்வி மையங்களில் கைதிகளுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார். சிறையிலிருந்தபடியே 31 பட்டங்களை பெற்ற இவரது சாதனை உலக சாதனை புத்தகம் மற்றும் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இதற்கான சான்றுகள் நேற்று அவருக்கு வழங்கப்பட்டது.